Pages

Wednesday 3 April 2013

மீண்டும் நிலைநிறுத்தும் கிறிஸ்துவின் அன்பு


நான் அடைந்தும், உங்களுக்கு பிரதானமாக ஒப்பு வித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங் களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசன மானார் (1கொரிந்தியர்15:3-5). 



”அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார் (மத்தேயு26:31). என்று இயேசு கிறிஸ்து கூறினபோது, பேதுருவுக்கு அதைக் குறித்து மிகவும் துக்கமாயிருந்தது. அவர் என்னுடைய போதகருக்கு இந்த காரியங்கள் நடக்கக்கூடாதே என்று சிந்திக்க ஆரம்பித்தார். அவரோடு கடந்த மூன்றறை வருடங்களாக கூடவே இருந்து, அவர் போதித்த காரியங்களையும், அவர் செய்த அற்புதங்களையும் கண்டிருந்த பேதுருவுக்கு, இந்த காரியங்கள் நடக்க எந்த சாத்தியமும் இல்லை என்ற ஆணித்தரமான விசுவாசம் இருந்தது. 


ஆனால் ஒரே இராத்திரியில் எல்லாம் மாறுதலாக முடிந்தது. வியாழனன்று இராப்போஜனத்தை ஆசரித்த சில மணி நேரங்களில், யூதாஸ்காரியோத்து, கிறிஸ்துவை காட்டிக்கொடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, ஏரோதின் அரண்மனைக்கும், பிலாத்துவின் நியாயாசனத்திற்கு முன்பும் நிறுத்தப்பட்டு, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிப் போல, அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரித்துப் போனாரே என்ற ஆதங்கத்தோடு பேதுரு நடந்த நிகழ்ச்சிகளை சிந்தித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தான். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, அவரோடு யோவானைத் தவிர எந்தவொரு சீஷனும் இருக்கவில்லை. பேதுரு வும் கூட்டத்தோடு கூட்டமாக போய் விட்டிருந்தார். இயேசு கிறிஸ்துவின் சரீரம் அடக்கம் செய்யப்பட்ட போது, ஒரு சீஷனும் இருக்கவில்லை. சாயங்காலமானபோது, இயேசு வுக்குச் சீஷனும், ஐசுவரியவானுமா யிருந்த யோசேப்பு எனும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானா கிய ஒரு மனுஷன் வந்து, பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரிரத்தை கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, துய்யாத மெல்லிய துப்பட்டியிலே அதை வைத்து, கல்லரையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான். அங்கே மகதலேனா மரியளும், மற்ற மரியாளும் கல்லரைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள் (மத்27:57-61). ஒரு சீஷனும் அவரை அடக்கம் செய்யும்வரைக் காத்திருக்கவில்லை. 

பேதுரு நடந்த காரியங்களை நினைத்தபடி ஆதங்கத்தோடு நடந்து கொண்டிருந்தான். கர்த்தரை மறுதலித்து விட்டோமே என்ற மனதில் குற்ற உணர்வோடும், மனம் நிறைந்த துக்கத்தோடும், சனிக்கிழமை இரவு நெடுநேரம் தூக்கம் வராமல், திரும்பித் திரும்பி படுத்து, கடைசியாக கண் அயர்ந்தபோது, விடிய ஆரம்பித்தது, அப்போது திடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அதை கேட்டவுடன் பேதுருவின் இருதயம் பலமாக துடிக்க ஆரம்பித்தது. ஐயோ, அரசாங்க வீரர்கள் தன்னை கைது செய்துப்போகத்தான் வந்திருக்கிறார்கள் என்று பயப்பட ஆரம்பித்தார். 

அதற்குள் மகலதேனா மரியாளின் சத்தம் கேட்டது. ”நான் தான் கதவை திறவுங்கள்” என்ற சத்தம் கேட்டு, எழுந்து கதவை திறந்து, ”என்ன இந்த காலையிலே?” என்று கேட்டான். அதற்கு மரியாள், மேல் மூச்சு வாங்க, ”இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார்” என்று கூறினபோது, பேதுருவின் தூக்கம் எங்கோ ஓடிப்போனது. பக்கத்தில் படுத்திருந்த யோவானின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு கல்லறை இருந்த இடத்திற்கு வேகமாக ஓடினார். 

கிறிஸ்து வைக்கப்பட்டிருந்த கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தார். அங்கு இயேசு கிறிஸ்துவை சுற்றி வைக்கப்பட்டிருந்த சீலைகள் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. ”பேதுருவோ எழுந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்து பார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக் கொண்டு போனான்” (லூக்24:12). ஆம், மீண்டும் பேதுரு என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்காமல், இயேசுகிறிஸ்து நிஜமாகவே உயிர்த்தெழுந்து விட்டாரென்று சந்தேகமும், வியப்பும், கலக்கமும் உடையவராக நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று இயேசு கிறிஸ்து அவருக்கு முன் தோன்றினார். ”கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்” (1கொரிந்தியர்15:5). 

இயேசு கிறிஸ்து அவர் முன் தோன்றிய உடனே, பேதுருவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கர்த்தைரை மறுதலித்த தனக்கு, தகுதியில்லாத தனக்கு முன், தான் நேசித்த ஆண்டவர், தான் மரித்ததாக எண்ணியிருந்த கர்த்தர் தனக்கு முன் நிற்பதை கண்ட பேதுரு அவருடைய காலில் விழுந்து, சந்தோஷ மிகுதியால் கண்ணீர் விட்டார். 

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை கண்ட பேதுரு, இயேசு கிறிஸ்து கர்த்தைரை கண்டோம் என்று அப்படியே இருந்து விடவில்லை. மீண்டும், ”மீன் பிடிக்கப்போகிறேன்” என்று தன்னோடு சீஷர்களையும் அழைத்துக் கொண்டு சென்றபோது, இயேசு கிறிஸ்து தான் அழைத்த அழைப்பை உறுதிப்படுத்தும்படி அவரை அழைத்து மீண்டும் தன் ஊழியத்தில் நிலைநிறுத்தினார். அதன் பின் பேதுரு திரும்பி போகவில்லை. கர்த்தருக்கு உண்மையாக இறுதிவரை வாழ்ந்து, தன்னை கிறிஸ்துவைப் போல அறையும்படி கொடுக்கப்படும் போது, தான் கிறிஸ்துவைப்போல சிலுவையில் தன் தலை நேராக வைத்து அடிக்கப்பட பாத்திரவான் அல்ல என்று சொல்லி, தலைகீழாக தன்னை சிலுவையில் வைத்து அரையும்படி சொல்லி, அப்படியே அறையப்பட்டு, இரத்தசாட்சியாய் மரித்தார். 
பிரியமானவர்களே, இது ஒரு கதைப் போல இருந்தாலும், இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தபின், பேதுருவிற்கு தனிப்பட்ட முறையில் தரிசனமானார் என்று 2கொரிந்தியர்15:5லும், லூக்கா24:34லிலும் பார்க்கிறோம். கர்த்தரை மறுதலித்த பேதுருவையும் அன்புகூர்ந்து தம்முடைய ஊழியத்தில் நிலைநிறுத்தின கிறிஸ்து, ஒருவேளை அவரை விட்டுப்பிரிந்து தூரப்பொயிருக்கின்ற நன்மையும் கூட திரும்ப அவருக்குள் நிலைநிறுத்த வல்லவராகவே இருக்கிறார். 

ஒருவேளை நான் அதற்குத் தகுதியில்ல என்று நினைக்கின்றாயோ? பேதுருவை அழைத்த தேவன் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். மீண்டும் அவருடைய அழைப்பிற்கு செவிசாய்த்து அவருடைய அன்பிற்குள் வந்துவிடுவோம். கர்த்தர் ஒருபோதும் நம்மை தள்ளிவிடவே மாட்டார். அவருடைய ஊழியத்தில் நம்மை நிலைநிறுத்தி, நிட்சயமாகவே அநேகருக்கு நம்மை ஆசீர்வாதமாக வைப்பார். ஆமென். 

No comments:

Post a Comment