Pages

Tuesday 18 February 2014

பின்னிட்டு பார்க்க வேண்டாம்

அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். - (லூக்கா 9:62).
அமெரிக்க தேசத்திலே ஆத்தும பாரமுள்ள சபையொன்றிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு ஒருவர் மிஷனெரியாக அனுப்பப்பட்டார். அநேக நாட்கள் பயணத்திற்குப் பின் ஆப்பிரிக்க எல்லைப்பகுதியை அடைந்தார். அங்கிருந்து ஒரு துடுப்பு படகு மூலம் மக்கள் வாழும் பகுதியை நோக்கிச் சென்றார். மாலை மயங்கும் அந்நேரத்திலே மக்கள் இடும் ஆரவாரங்களை கேட்ட அவர், காரணமறிய துடுப்பை ஆர்வமாகப் போட்டு காதை கூர்மையாக்கினார். அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தபடி, அம்மக்கள் மனிதர்களை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவருடைய உள்ளத்தில் பயம் ஏற்பட ஆரம்பித்தது.
.
இருப்பினும் தான் அனுப்பப்பட்டதன் நோக்கத்தை கண் முன் நிறுத்தி முன்னேறினார். பின் ஒரு இடத்தில் இறங்கி, படகை கரையில் கட்டிவிட்டு சென்றார். ஊழியம் செய்ய ஆரம்பித்தார். வருடங்கள் உருண்டோடின. ஊழியத்தின் பலனை காண முடியவில்லை. மக்களிடமுள்ள நிர்விசாரமும் மாறவில்லை.
.
ஒரு நாள் மிகவும் சோர்வுற்றவராக, அடர்ந்த காட்டிற்குள் சென்று கதறி அழுதார். 'ஆண்டவரே, நான் தியாகத்தோடுதானே இங்கு வந்தேன். ஜெபத்தில் போராடித்தானே ஆத்துமாக்களை சந்திக்கிறேன். ஏன் கனியை காண முடிவில்லை?' என கதறினார். கதறலுக்கு நடுவே ஒரு மெல்லிய சத்தத்தை உள்ளத்தில் உணர்ந்தார். 'மகனே, நீ தியாகத்தோடும், ஜெபத்தோடும்தான் ஊழியம் செய்கிறாய். ஆனால் உன் நம்பிக்கையை எங்கு வைத்திருக்கிறாய், உயிருக்கு ஆபத்து வந்தால் தப்பித்து விடலாம் என கரையில் கட்டியுள்ள படகின் மீதா, அல்லது என் மீதா?' என ஆண்டவர் கேட்டதை உணர்ந்தார் அந்த ஊழியர்.
.
உடன்தானே உள்ளத்தில் உணர்த்தப்பட்டவராக நேராக சென்று படகு கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்தெடுத்தார். அது தண்ணீரில் மிதந்து எங்கே சென்றது. அன்று முதல் ஆவியில் அனலடைந்தவராய் உற்சாகமாய் மக்களை சந்தித்தார். தேவன் ஆத்துமாக்களை கொள்ளைப் பொருளாய் அவருக்கு கொடுத்தார்.
.
எலியா தீர்க்கதரிசியின் மூலம் ஊழிய அழைப்பை பெற்ற எலிசா அதுவரை தன் வாழ்வின் ஆதாரத்திற்கு நம்பிக்கையாக இருந்த ஏர் மாடுகளை அடித்து, மாடுகளின் மேல் வைக்கப்படும் மரத்தினாலே ஜனஙக்ளுக்கு அதை சமைத்து கொடுத்து விட்டு, எலியாவின் பின் சென்றார். 'என்றோ ஒரு நாள் ஊழியத்தில் சோர்வு ஏற்படுமாயின் திரும்பி வந்து ஏர்மாடுகளை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஒருபோதும் தனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அப்படி செய்தார்.
.
பிரியமானவர்களே நம்முடைய நம்பிக்கை எதன் மேல் உள்ளது? படிப்பு, பதவி பரம்பரை சொத்து, பேங்க் பேலன்ஸ் இவைகளின் மேல் உள்ளதா? இல்லை இவற்றை எல்லாம் கொடுக்கும் தேவன் மேல் உள்ளதா? வங்கியில் பணம் வைத்திருப்பதோ, சொத்து வைத்திருப்பதோ பாவம் அல்ல, ஆனால் அதன்மேல் நம் முழு நம்பிக்கையும் வைக்கும்போது அது பாவமாகிறது.


.
தேவன் நம்மை நம்பி கொடுத்திருக்கும் ஊழியத்தில், வேலையில், மற்ற காரியங்களில் நாம் கவனத்தை வைக்காமல், தேவனை விட்டு பின் வாங்கிப் போய், நம் பழைய வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோமா? தேவனும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று விட்டு வந்த உலக காரியங்களை பின்னிட்டுப் பார்க்கிறோமா?
.
கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று இயேசு கூறினாரல்லவா? தேவனுடைய இராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களாகும்படி, உலகத்தை திரும்பிப்பார்த்து அதன்பின் போகாதபடி, கலப்பையில் கை வைத்து, இயேசுவையே நோக்கி முன் செல்வோம். தேவன் செய்த நன்மைகளை நாம் பின்னிட்டு திரும்பிப் பார்க்கலாம், ஆனால் உலகத்தை பின்னிட்டுப் பார்க்க வேண்டாம். நாம் ஜெபித்தால், அதற்கான கிருபையை கர்த்தர் நமக்கு தருவார். ஆமென் அல்லேலூயா! 

No comments:

Post a Comment